Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கரூர்: கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தொற்று பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை ஆட்சியர் அன்பழகன் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது; உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முதல்வரின் உத்தரவின் பேரில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு ஆட்டோ விளம்பரங்கள், உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகள், தண்டோரா மூலமாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது கரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள சுமார் 2.16 லட்சம் வீடுகளுக்கும், நகராட்சிப்பகுதிகளில் உள்ள 68412 வீடுகளுக்கும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 48804 வீடுகளுக்கும், என சுமார் 3.34 லட்சம் வீடுகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ,ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.